இலங்கையை ஊடறுத்து மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது “புரவி”

புரவி சூறாவளி நாட்டை ஊடறுத்து மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் வட பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் பலத்த காற்றும் மழை வீழ்ச்சியும் பதிவாகும்.
இதேவேளை, இலங்கையில் எதிர்வரும் மணித்தியாலங்களில் காற்றும் மழை வீழ்ச்சியும் பதிவாகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரவித்துள்ளது.
புரவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் நேற்று இரவு 8.45 மணியளவில் தரையை தட்டி இலங்கைக்குள் பிரவேசித்தது.
பின்னர் முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 – 90 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தச் சூறாவளி காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காற்றுடனான கடும் மழை வீழ்ச்சி பாதிவாகியுள்ளதுடன் தொடர்ந்தும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.